திங்கள், 27 ஜூலை, 2020

அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவலின் தாக்கம் என்ன?

கொரோனா பொது முடக்க காலநிலையின் போது அசாமில் உள்ள பன்றி வளர்ப்பு தொழில் பெரும் இழப்பை சந்தித்தது. அதைத்  தொடர்ந்து, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் பரவல் காரணமாக, அசாமில் 17,000-க்கும் மேற்பட்ட பன்றிகளும்,அருணாச்சல பிரதேசத்தில் 4,500-க்கும் மேற்பட்ட பன்றிகளும் கொல்லப்பட்டன .

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு பன்றிகளை அனுப்பி வைக்கும் மத்திய அரசின்  சமீபத்திய முடிவிற்கு அசாம் தனது எதிர்ப்பை பதிவு செய்தது.  மத்திய அரசின் இந்த முடிவு பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்பு முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அம்மாநில அரசு கருதுகிறது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மனிதர்களைப் பாதிக்காது. ஆனால், பன்றிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்தியாவில்  முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தற்போது தான் பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. பன்றி இறைச்சியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், நுகர்வோர்  சந்தையாகவும் விளங்கும் சீனாவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட  பன்றிக் காய்ச்சலால் லட்சக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன. இதன் விளைவாக, அங்கு பன்றி இறைச்சியின் விலை வழக்கத்தைவிட 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது.

காட்டு மற்றும் வீட்டு பன்றிகளை பாதிக்கும் இந்த நோய்  வைரசால் வரும் கடுமையான  உயிரழிக்கும் நோயாகும்.  கடுமையான ரத்தக்கசிவு காய்ச்சல் இதன் அறிகுறியாக உள்ளன.    இந்த நோயின் இறப்பு விகித தீவிரத்தன்மை  100 சதவீதமாக உள்ளது. பாதிக்கப்பட்ட அல்லது காட்டுப் பன்றியுடனான (உயிருடன் மற்றும் இறந்த) நேரடி தொடர்பு மூலமாகவும், உணவு கழிவுகள், தீவனம்,குப்பை போன்ற அசுத்தமான பொருட்களை உட்கொள்ளல் மற்றும் உண்ணி போன்ற வெக்டர் மூலம் மறைமுகமாகவும் இந்த நோய் பரவுகிறது.

இந்த நோய் பன்றிகளிடையே திடீர் இறப்புகளை உருவாக்கும். அதிக காய்ச்சல், மனச்சோர்வு, பசியின்மை, தோலில் ஏற்படும் ரத்தக்கசிவு, வாந்தி,  வயிற்றுப்போக்கு ஆகியவை இந்த நோயின் வெளிப்பாடாகும்.  இதன், அறிகுறிகள் கிளாசிக்கல் ஸ்வைன் ஃபீவர் உடன்  ஒத்தியிருந்தாலும், தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட  கிளாசிக்கல் ஸ்வைன் ஃபீவரை ஏற்படுத்தும் வைரஸ் வேறு குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆபத்தானது என்றாலும், கால் மற்றும் வாய் நோய் (foot-and-mouth disease) போன்ற பிற விலங்கு நோய்த் தொற்றின் தீவிரத்தன்மையை விட குறைவானது.  அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து தற்போது வரை இல்லை என்பதால், நோய்ப் பரவலைத் தடுக்க விலங்குகள் கொல்லப்படுகின்றன.

 

தற்போதைய பாதிப்பு எவ்வாறு தொடங்கியது?

ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தி குறிப்பில்,” சீனா, மங்கோலியா, வியட்நாம், கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், வட கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் தற்போதைய பரவலால்  பாதிக்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் சீனாவில்  முதன்முறையாக ஏ.எஸ்.எஃப் பரவல் உறுதி செய்யப்பட்டது, அதன் விளைவாக, அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகள் கொல்லப்பட்டன. வியட்நாமில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின்  பாதிப்பு முதன் முறையாக 2019 பிப்ரவரியில் உறுதி செய்யப்பட்டது. அங்கு, இதுநாள் வரை 6 மில்லியனுக்கும் அதிகமான பன்றிகள் கொல்லப்பட்டன.

திபெத், அருணாச்சல பிரதேசம் வழியாக, பன்றி வளர்ப்பில் முதன்மை மாநிலமாக உள்ள அசாமில், இந்த நோய் பரவியதாக  அதிகாரிகள் நம்புகின்றனர். அசாமில் ‘ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்’ பாதிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கண்டறிப்பட்டது

கடந்த ஜூன் மாத பிற்பகுதியில், “போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (NIHSAD) சோதனையிடப்பட்ட மாதிரிகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை உறுதி படுத்தியதை அடுத்து, பன்றி இறைச்சி விற்பனைக்கு அசாம் மாநில அரசு தடை விதித்தது.

2018 மற்றும் 2019 க்கு இடையில், ஐரோப்பாவின் மூன்று நாடுகளிலும், ஆப்பிரிக்காவின் 23 நாடுகளிலும் இந்த நோய் பரவியதாக  விலங்குகள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச அமைப்பு (WOAH) தெரிவிக்கிறது.

தாக்கம் என்ன?  

கொரோனா ஊரடங்கு, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆகிய இரண்டு பாதிப்பால் வடகிழக்கு மாநிலங்களில் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். வடகிழக்கு மாநிலங்களின் பன்றி இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு, பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், பண்ணைப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.