சனி, 25 ஜூலை, 2020

விவசாயிகள் நடத்தும் கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு” - மு.க ஸ்டாலின்

Image

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தன்மை கொண்டவை என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அவசரச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்துவதுடன், ஜூலை 27 அன்று அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்திடவும், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுளளார். 


அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இந்தக் கையெழுத்து இயக்கம் மற்றும் கருப்புக் கொடிப் போராட்டத்திற்குத் திமுக, தனது முழு ஆதரவினை வழங்குவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கருப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படுவதற்கு தி.மு.க. துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.