வெள்ளி, 31 ஜூலை, 2020

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயலுகிறது” - கனிமொழி

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கனிமொழி ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்வதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார். 


நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தவும், மனிதவள மேம்பாட்டுத்துறையை கல்வி அமைச்சமாக பெயர் மாற்றம் செய்யப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பல கல்வியாளர்கள், மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் “புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.