புதன், 8 ஜூலை, 2020

சி.பி.எஸ்.இ பாடச்சுமை குறைப்பு: குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை பகுதிகள் நீக்கம்

revision of syllabi by CBSE for classes IX-XII : கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடச்சுமையைக் குறைக்கும் விதமாக, 2020-21-ஆம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு அரசியல் அறிவியியல்  புத்தகத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவம் , குடியுரிமை, தேசியவாதம்,  மதச்சார்பின்மை ஆகிய பகுதிகளை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது.

 

மேலும், ‘நமக்கு  ஏன் உள்ளாட்சி அமைப்புகள் தேவை’, ‘இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி’ போன்ற பகுதிகளுக்கும் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமையைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தை திருத்தியமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சி.பி.எஸ்.இ க்கு அறிவுரை வழங்கியிருந்தார் .

அதன் அடிபடியில், 2020-21-ஆம் கல்வி ஆண்டில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ திருத்தியமைத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டரில்  , “கற்றல் அளவை எட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய அம்சங்களைக் கை வைக்காமல், கூடிய மட்டும் 30 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது”  என  பதிவு செய்தார்.

 

 

பாடத்திட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டக்குழு மற்றும் நிர்வாக அமைப்பின் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட படிப்புக்குழுக்கள் பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும், குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை  மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளுடன் இணைக்கும் அளவுக்கு விளக்கி கூறுமாறு, பள்ளிகளின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை சி.பி.எஸ்.இ  வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உள்மதிப்பீடு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுக்கான தலைப்புகளாக இருக்காது என்று  மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டது.