சென்னையில் தொடர்ந்து அடாத மழை பெய்து வருவதால், தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் இப்போது வர வேண்டாம் 2 நாள் கழித்து வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் அடாத மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால், சென்னையில் மழை பாதிப்பு பற்றிய டாப் 10 ஹைலட்ஸ்களை தெரிந்துகொள்வோம்.
தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு சென்னையில் இருந்து லட்சக் கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு தீபாவளியைக் கொண்டாட சென்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பயணிகளுக்கு தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து, சிறப்பு பேருந்துகளை இயக்கியது.
தீபாவளி பண்டிகை நாளில் இருந்தே சென்னையில் கன மழை பெய்யத் தொடங்கிவிட்டது. நேற்று (நவம்பர் 6) பெய்த அடாத மழையால், சென்னையில் பெரம்பூர், வேளச்சேரி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
*இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயின் கோட் அணிந்து அமைச்சர்களுடன் சென்று மழை பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ள நீரில் இறங்கி சென்று ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். முதலமைச்சர் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தபோது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
*தீபாவளிப் பண்டிகை விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து மக்கள் பலரும் சென்னை நோக்கி வருவதால், மழை காரணமாக சென்னை அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு மதுராந்தகம் சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
*தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் அடாத மழை பெய்துவருவதால், தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மக்கள் 2 நாள் கழித்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
*தொடர் கனமழையால், சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதலில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
*சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வானிலை ஆய்வும் அமையம் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
*சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “வங்கக் கடலில் வரும் 9ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை வட தமிழகம் நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். முழுவதும் மழையற்ற நிலைக்கு தற்போது வாய்ப்பில்லை. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே சென்னையில் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்தது” என்று கூறினார்.
மேலும், நவம்பர் 10, 11-ம் தேதிகளில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
*திமுக இளைஞரணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி, சேப்பாக்கம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
*இன்று மாலையில் சென்னையில் வேளச்சேரி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
முன்னதாக, சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பொதுமக்கள் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை உதவி எண்கள்: 044-29510400, 9444340496
24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்கள்: 8754448477
ஆம்புலன்ஸ் / சுகாதார ஆலோசனை உதவிக்கு… : 108 / 104
சென்னையை நோக்கி வருபவர்கள் 2 நாள் கழித்து பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், தீபாவளி விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி வரும் மக்களே இப்போது வராதீங்க என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-continue-rains-cm-mk-stalin-asks-people-now-do-not-come-to-chennai-please-come-after-2-days-365947/