அதிர்ச்சி தகவல் ....
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 25 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மேலும், சுமார் 600க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கவுதமாலாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, எல் கம்பிரே டூஸ் என்ற மலையடிவார கிராமத்தில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்த கிராமமே கிட்டதட்ட மண்ணிற்குள் புதைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்சரிவு ஏற்பட்டபோது, அனைத்து மக்களும் தங்களது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்ததால் உயிர் தப்பிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
மேலும், பள்ளதாக்கு பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் தொடர் மழை காரணமாக ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணியில் தீயணைப்பு படை வீரர்களுடன், தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 36 பேர் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிர் பிழைத்தவர்கள் அரசு நிவாரண முகாம்களில் தாங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், 600க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.