வியாழன், 6 ஏப்ரல், 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக களமிறங்கும் கட்ஜு.நேரில் ஆதரவு தர முடிவு!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் மத்திய அரசு தனது வாக்குறுதியை செயல்படுத்தாமல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தான் களமிறங்கப் போவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
 

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் மார்கண்டேய கட்ஜூ. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ் மொழி மீது பற்றுகொண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தவர். இதனால் தமிழர்கள் மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதும் மதிப்பு கொண்டார். ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில் மார்கண்டேய கட்ஜூ  அமெரிக்கா சென்று, அங்கு தமிழர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி, தமிழக விவசாயத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது மக்களையும், விவசாயத்தையும், குடிநீரையும், சுற்றுச்சூழலையும் பாதிக்காத அறிவியல் தான் நமக்கு வேண்டும் என்று தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன்  திட்டம் விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் என்றால், அந்த திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம் என கூறிய கட்ஜு மத்திய அரசு  வியாபார நோக்கத்தில் செயல்படாமல் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனால் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடும் தமிழக மக்களுக்கு சட்டப்படியான உதவிகளை செய்வேன் என்றும்த தமிழ்நாட்டுக்கு . நேரில் சென்று இந்த திட்டத்தை முற்றிலும் தடை செய்ய உதவி செய்வேன் என தெரிவித்தார்.