செவ்வாய், 24 நவம்பர், 2020

சுமார் 120 கி.மீ வேகத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கும் நிவர் புயல்.. அடுத்து என்ன நடக்கும்?

 nivar cyclone tamil cylone nivar chennai : வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிகர் புயலானது சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று (24.11.20) கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100 லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (25-11-2020): நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புயல் காரணமாக வரும் 25ம் தேதி வரையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வரும் 25ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.