வெள்ளி, 20 நவம்பர், 2020

வேத மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பட்டாசு வெடிக்கப்படவில்லை, காப்பியங்களிலும் புராணங்களிலும் பட்டாசுகளைப் பற்றிய குறிப்பில்லை

 தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநில அரசின் உத்தரவை ஆதரத்ததிற்காக, கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி டி.ரூபா சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். நவம்பர் 14 ம் தேதி தனது முகநூல் பதிவில், ” தீபாவளி பண்டிகையின் போது  பட்டாசு வெடிப்பது இந்து சமயத்தின் மரபில்லை என்றும், புராணங்களும், இதிகாசங்களும் பட்டாசுகள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் எழுதியிருந்தார்.

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் பெங்களூரு நகரத்தின் நுரையீரல் போன்று செயல்படும் வனப்பகுதிகளில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிய அவர், “ வேத மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பட்டாசு வெடிக்கப்படவில்லை, காப்பியங்களிலும் புராணங்களிலும் பட்டாசுகளைப் பற்றிய குறிப்பில்லை. எனவே, இது இந்துகளுக்கு எதிரான செயல் என்று நீலக்கண்ணீர் வடிக்க வேண்டாம். ஐரோப்பியர்கள் இந்திய வருகையால் பட்டாசுகள் முக்கியத்துவம் பெற்றன ” என்று பதிவிட்டார்.

 

இதைத் தொடர்ந்து, பல ட்விட்டர் பயனர்கள் ,”பிற  மதங்களில் உள்ள பழக்கவழக்கங்களை உங்களால் கேள்வி கேட்க முடியுமா? என்று டி.ரூபாவிடம்  கேள்வி எழுப்பினர்.

‘True Indology’  என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், இந்தியாவின் பண்டைய வேதங்களில் பட்டாசுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்கமறுத்த ரூபா, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ‘True Indology’ – யிடம்  வினவினார். அதன்பின், சில மணிநேரங்களில், ‘True Indology’-ன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

நடிகை கங்கனா ரனாவத் உட்பட பல ட்விட்டர் பயனர்கள், ‘True Indology’-ன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ட்விட்டர் நிர்வாகத்தின்  திடீர் அதிர்ச்சியான நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதிகாரி ரூபா, பழிவாங்கும் எண்ணத்தோடு நடந்து கொண்டார். எதிர்த்தரப்பு வாதங்களில் உள்ள உண்மையை எர்கொள்ள முடியாத காரணத்தினால், அவர் @TIinExile கணக்கை முடக்கிவிட்டார்.” என்று ரனாவத்  தனது ட்விட்டரில் தெரிவித்தர். இதைத் தொடர்ந்து, #BringBackTrueIndology  என்ற ஹஷ்டேக் ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கியது.

 

 

இதற்கு பதிலளித்த அதிகாரி ரூபா, “ட்விட்டருக்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது” என்று ட்வீட் செய்தார். “சட்டங்களை மதிப்பதும் ஒரு அரசு அதிகாரிக்கு  மிக முக்கியம். நீதிமன்றம் மூலமாக நீங்கள் சட்டங்களை கேள்வி கேட்கலாம். ட்விட்டரில் அல்ல. அரசியலமைப்பால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் மூன்று தூண்களுக்கு மரியாதை செலுத்துங்கள். அரசின் உயர் மட்டத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவைப் பற்றி பேசியதற்கு ஒரு அதிகாரியை மௌனமாக்க முயற்சிக்கிறீர்கள். எதற்காக? அரசு உத்தரவைப் பின்பற்ற வேண்டாம் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? மன்னிக்கவும். எப்போதும், அது நடக்கப்போவதில்லை, ”என்று ட்வீட் செய்தார்.

கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு தமிழகம், மேற்குவங்கம், கர்நாடாகா உள்ளிட்ட பல மாநிலங்கள், தீபாவளி பண்டிகையின் போது  பட்டாசுகளை வெடிக்க தடை விதித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

source:https://tamil.indianexpress.com/india/karnataka-ips-officer-trolled-after-she-supported-the-ban-on-firecrackers-232809/