ஞாயிறு, 1 நவம்பர், 2020

பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருக்கு ஐ.ஐ.எம்.சியில் முக்கிய பொறுப்பு!

IIMCs new prof was sacked by BJP for calling Mahatma father of Pakistan : மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தேசிய தலைவர் என்று கடந்த ஆண்டு கூறிய பாஜகவின் மத்தியபிரதேச மீடியா செல் தலைவர் அனில்குமார் சௌமித்ரா தற்போது ஐஐஎம்சி ( Indian Institute of Mass Communication (IIMC)) கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மகாத்மா காந்தி பற்றி அவர் கூறிய சர்ச்சையான கருத்தை தொடர்ந்து சௌமித்ரா பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரின் சமூக வலைதள பக்கங்களில் எழுதி வரும் கருத்துக்கள் கட்சியின் சித்தாந்தங்களும் கொள்கைகளுக்கும் மாறாக இருக்கிறது என்று கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது அக்கட்சி. சௌமித்ரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் ”காந்தி தேசத்தின் தலைவர்தான். ஆனால் பாகிஸ்தானின். இந்த நாட்டில் அவரைப் போன்று கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். சிலர் மதிப்பு உடையவர்கள். சிலர் மதிப்பற்றவர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல 2013ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெளியாகி வரும் பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான சரைவேதியில் (Charaiveti) ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் கத்தோலிக்க தேவாலயங்களில் சகோதரிகளுக்கு நடக்கும் பாலியல் சுரண்டல்கள் பற்றி ‘Church ke nark me nun ka Jeevan’ என்ற கட்டுரையை எழுதியதன் காரணமாக இவர் பாஜகவிலிருந்து அப்போது நீக்கப்பட்டார்.

அப்போது, அன்றைய இந்தூர் தொகுதியின் எம்.பியாகவும், பண்டித் தீனதயாள் விசார் பிரகாஷனின் தலைவராகவும் பணியாற்றிய சுமித்ரா மஹாஜனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “நான் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன். என்னுடைய ஆர்.எஸ்.எஸ். பின்புலம் மற்றும் சித்தாந்தங்களுக்காகவே நான் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை மோகன் பகவத், சுரேஷ் ஜோஷி, சுரேஷ் சோனி, ராஜ்நாத் சிங், எல்.கே. அத்வானி மற்றும் சிவராஜ் சிங் உள்ளிட்ட மாநில தலைவர்களுக்கு அக்கடிதத்தை வழங்கினார்.

ஐ.ஐ.எம்.சி – இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் கல்வியை வழங்கும் இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 60க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்ற நேர்காணலில் சௌமித்ரா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 26ம் தேதி அவர் அந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஐ.ஐ.எம்.சி. அவருக்கான ஆஃபர் கடிதத்தை அக்டோபர் மாதம் அனுப்பியது. அவர் அங்கு இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்க முடியும.  இந்தியன் எக்ஸ்பிரஸ் சௌமித்ராவை தொடர்பு கொள்ள முற்பட்டது. ஆனால் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ஐ.ஐ.எம்.சி. இயக்குநர் சஞ்சய் திவேதி “இது குறித்து கருத்து கூற ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டார்.