திங்கள், 30 நவம்பர், 2020

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை

 Election 2021: வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இருபெரும் கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் அதன் மூத்த தலைவர்கள் இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. அதனால் அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல்வாதிகளிடமும், பொதுமக்களிடமும் அதிகரித்துள்ளது. அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என பாஜக அறிவித்தது. அதோடு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கடந்த வாரம் தமிழகம் வந்து சென்றார்.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சியான திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் இத்தேர்தலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் ராகுல் காந்தி. காணொளிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு பேசிய தினேஷ் குண்டுராவ், சட்ட மன்ற தேர்தலுக்காக திமுக-விடம் பேரம் பேச மாட்டோம் எனவும், எதார்த்தத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.