வெள்ளி, 27 நவம்பர், 2020

கோவிட்-19 புதிய நெறிமுறைகள்: மீறினால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு

 இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை, இந்த வழிகாட்டுதல்கள் அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. உள்ளூர் கள நிலவரங்களின் அடிப்படையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இரவு நேர ஊரடங்கு போன்ற தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் மாநிலங்கள் உள்ளூர் முடக்கத்தை அமல்படுத்தக் கூடாது.

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு எவ்வித தடையுமின்றி, மாநிலங்கள் தங்கள் உள்ளூர் முடக்கத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சரியான கொரோனா நோய்த் தடுப்பு நடத்தைமுறையை  உள்ளூர் காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள்  உறுதி செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறையின்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுக்களின் மூலம் அனைத்து வீடுகளும் கண்காணிக்கப்படும், பரிசோதனைகள் நடத்தப்படும்.

கொரோனா நோயாளிகள் விரைந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

 

நடத்தைமுறை:

முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நடவடிக்கைகளுக்கு அனுமதி: 

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளவாறு சர்வதேச விமான பயணம்

50 சதவீதம் கொள்ளளவுடன் திரையரங்குகள்

விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள்

வர்த்தக நோக்கங்களுக்காக கண்காட்சி அரங்குகள்

அரங்கத்தின் 50 சதவீத கொள்ளளவுடன், 200 பேருக்கு மிகாமல் சமுக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள்

ஆகிய  நடவடிக்கைகள் கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே அனுமதிக்கப்படுவதாக வழிமுறைகள் தெரிவிக்கின்றன.