ஞாயிறு, 22 நவம்பர், 2020

"அதிகாரத்தை பயன்படுத்தினாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது!" - மு.க.ஸ்டாலின்

 அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் பழனிசாமி என்ன செய்தாலும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் சேலத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில், 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலிக் காட்சி மூலம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். 

திமுக அரசியல் செய்ததாலேயே, இதுபோன்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை, முன்பே சொல்லாதது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பினார். 

மேலும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி வருவதாகவும், அந்த அறிக்கைகளுக்கு பின்னர்தான் அரசின் அறிவிப்புகள் வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்