சனி, 21 நவம்பர், 2020

ஆன்லைன் ரம்மி தடை மீறுபவர்களுகு அபராதம், சிறை தண்டனை

 ஆன்லைன் ரம்மி எனும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் தமிழக அரசு இயற்றியுள்ள அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி எனும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் தமிழகத்தில் பதிவானது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து தமிழக அரசு, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் நோக்கத்தில் அவசரச்சட்டம் இயற்றியது. இந்த் அவசரச்சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்படும். அதே போல, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் (Online gaming house)வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆன்லைன் ரம்மி (Online Rummy) போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக இந்த அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்ற (Ordinance) உள்ளது.

இந்த அவசர சட்டம் (Ordinance) 1930ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1858ம் ஆண்டு சென்னை நகர காவல் சட்டம், 1859ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிற்கு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் கீழ்கண்ட நோக்கங்களுக்காக இயற்றப்பட உள்ளது.

i) இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை தடை செய்யவும்;

ii) இத்தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கவும்;

iii) ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் (Online gaming house)வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 வருட சிறை தண்டனையும் வழங்கவும்;

iv) இவ்விளையாட்டில் பணப் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கவும்;

v) இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசரச் சட்டம் (Ordinance) வழிவகுக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.