திங்கள், 23 நவம்பர், 2020

அரசு விழாவை அதிமுக –பாஜக கூட்டணியை உறுதி செய்யும் நிகழ்ச்சியாக நடத்தியுள்ளனர்: முத்தரசன் விமர்சனம்!

 சென்னையில் அரசு விழாவில் உள்துறை அமைச்சர், முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் அரசியல் பேசியது மரபு மீறிய செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை சிந்துபூந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான பாலன் இல்லத்தை அக்கட்சியின்  மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அரசு திட்டங்கள் குறித்து பேசுவதற்கு பதில் அரசியல் பேசியது மரபு மீறிய செயல் என்றார்.

அரசு விழாவை அதிமுக –பாஜக கூட்டணியை உறுதி செய்யும் நிகழ்ச்சியாக நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சியினர் அரசு விழாவை அரசியல் விழாவாக மாற்றிய நிலையில் தி.மு.க சார்பில் உதயநிதி மேற்கொண்ட பிரசாரத்தை மட்டும் தடுப்பது ஏன் என்றும் முத்தரசன் கேள்வி எழுப்பினார்.