ஞாயிறு, 8 நவம்பர், 2020

இந்திய மீனவர்களின் படகுகளை அழிக்க மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்கள் உத்தரவு!

 இந்திய மீனவர்களின் படகுகளை அழிக்க மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இலங்கை  மன்னார்  மற்றும் ஊர்காவற்றுறை கடல்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையால் இந்திய படகுகள் சிறைபிடிக்கப்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பாக இந்த இரண்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 94 படகுகளும், மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட  27 படகுகளையும் அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியினை இரு நீதிமன்றங்களும்  வழங்கியுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் ஊடுருவிய 37 படகுகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின் பெயரில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றினை விடுவிக்க 2018-ம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பிறகு, இந்தியாவில் இருந்து வந்த மீனவ அமைப்புகள் 10 படகுகளை மட்டுமே எடுத்துச் சென்றன. சில படகுகளை எடுத்துச் செல்ல முடியாததால் அப்படியே கடலிலேயே விட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற 121 படகுகள் நீண்ட காலமாக கடலிலேயே கிடப்பதால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், அந்தப் படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நீரியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.