செவ்வாய், 3 நவம்பர், 2020

9 மாவட்டங்களில் கனமழை இருக்கு… லிஸ்ட் போட்ட சென்னை வானிலை மையம்!

 தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரு நாள்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் கிழக்கு அந்தமான் வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழக்கமான வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று கோத்தகிரியில் 80 மிமீ மழை பெய்துள்ளது. திருமூர்த்தி அணை 70 மிமீ, அமராவதி அணை, குன்னூர், உடுமலைப் பேட்டை, 50 மிமீ, ஒட்டன்சத்திரம் 40மிமீ, பெரியகுளம், வால்பாறை30 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகக் கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் கிழக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவுக்கு மேககூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.