திங்கள், 10 ஏப்ரல், 2017

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு April 10, 2017




வரும் 12ம் தேதி நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததையடுத்து அவர் பொது தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால், இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவித்து, தேர்தல் வேலைகளை தொடங்கியது.

இதனிடையே, அதிமுக கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உட்கட்சி பூசலால் அந்த கட்சியின் ஆஸ்தான சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

தொடர்ந்து, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும், தினகரன் அணிக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணி அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்றும், தினகரன் அணி அதிமுக அம்மா அணி என்றும் பெயர் சூட்டப்பட்டது. 

அணைத்து கட்சிகளும், வேட்பாளரை அறிவித்து பிரசார களத்தில் அனல் பறக்கவிட்டனர். இதனிடையே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்த வண்ணம் இருந்ததால், பல்வேறு புகார்களை சந்திக்க தொடங்கியது இந்த இடைத் தேர்தல்.

புகார்கள் குவியத் தொடங்கியதால், தமிழக மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் சைதியை நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

29 பக்க தேர்தல் ரத்து அறிக்கையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், எப்போது நேர்மையாக தேர்தல் நடக்கும் சூழல் ஏற்படுகிறதோ அப்போது நடக்கும் என அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 35 வழக்குகள் மற்றும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts: