சென்னை, ஏப்ரல்11- தமிழக ஆட்சி எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற பரபரப்பாக தகவல்களுக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் பரவலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக பல்வேறு பகுதிகளிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டிருப்பது, ஏதோ அதிரடி நடவடிக்கைகளுக்கான அறிகுறி என்று அரசியல் வட்டாரங்கள் கூறின.
குறிப்பாக, ஒரே நேரத்தில் 15-க்கும் அதிகமான தமிழக அமைச்சர்கள் ஊழல் காரணமாகக் கைது செய்யப்படலாம் என்றும் இதன் மூலம் ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே முக்கிய இடைத் தேர்தலாகக் கருதப்பட்ட ஆர்.கே. நகர் தேர்தல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருப்பதும் முக்கிய அமைச்சரான விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ஒரே சமயத்தில் நடந்த வருமான வரிச் சோதனைகளும் தமிழக அரசைக் கலைக்க மத்திய அரசு வகுத்திருக்கும் வியூகம் எனக் கூறப்பட்டது.
இன்னும் ஓரிரு தினங்களில் குறிப்பாக, வெள்ளிக்கிழமை அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என்று தமிழக ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே ஊழல் காரணமாக கைதாகியுள்ள சேகர் ரெட்டியிடமிருந்தும் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 15 தமிழக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்ற பரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
இத்துடன் தமிழக ஆட்சியையும் கலைப்பதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் ‘பகிர்’ தகவல் வெளியாகி இருப்பதாக ஊடக வட்டராங்கள் தெரிவித்தன.