சனி, 2 மார்ச், 2019

தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை...போர் பதற்றம் காரணமா? March 02, 2019

source : ns7.tv
Image
பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் சாமானிய மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து, பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது, இதனால், எல்லையில் போர் உண்டாகும் சூழல் தொற்றிக்கொண்டதால், பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். 
இந்நிலையில், இந்தியாவின் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. போர் பதற்றத்தின்போது பங்குச்சந்தை வீழ்ச்சி அடைவது வழக்கமென்றாலும், கடந்த 27ம் தேதி 239 புள்ளிகள் சரிந்தது கடும் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி கரணமாக, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் விலை ஏறியது. 
அன்றாடம் உபயோகிக்கும் பெட்ரோலின் விலை அதிகரித்துள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் சாமானிய மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 9ம் தேதி 72.92 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல், தொடர்ந்து அதிகரித்துவந்து, தற்போது 74.71 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போலவே, டீசல் விலையும் 69.25 ரூபாயில் இருந்து 71.09 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் பங்குச்சந்தை, தற்போது போர் பதற்றம் காரணமாக வீழ்ச்சி அடைந்திருப்பது பெட்ரோல் விலை ஏற்றத்திற்கான மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.