வெள்ளி, 25 மார்ச், 2016

சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை!


ht3781சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘காக்கிச்சட்டை’ படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் மூலம் சிவப்பு சந்தை – அதாவது, ‘ரெட் மார்க்கெட்’ என்கிற வார்த்தை உங்களுக்குப் பரிச்சயம் ஆகியிருக்கும். பண்டங்களை விற்கும் சந்தை போல மனித உடலின் உறுப்புகளை விற்கும் சந்தையே சிவப்பு சந்தை. உறுப்புகளை பறிப்பதற்காக தொடர்புடையவர்களைக் கடத்துவது, திட்டமிட்டே ஒருவரை மூளைச்சாவுக்கு உட்படுத்தி உறுப்புகளை எடுப்பது என சிவப்பு சந்தையை அடிப்படையாக வைத்து இயங்கும் நிழல் உலகத்தை இப்படங்கள் காண்பித்திருந்தன.

மனித உடலில் மூளையைத் தவிர்த்து எந்த உறுப்புகள் செயலிழந்து விட்டாலும் அதற்கு மாற்று உறுப்பினைப் பொருத்தி இயங்க வைக்க முடியும் என்கிற அளவுக்கு மருத்துவத் துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. 2008ல், மூளைச்சாவு ஏற்பட்ட ஹிதேந்திரன் என்னும் 15 வயது சிறுவனின் இதயத்தை அபிராமி என்னும் 8 வயது சிறுமிக்குப் பொருத்தி உயிர் பிழைக்க வைத்த சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். அதன்பிறகு அரசே உறுப்பு தானத்தை ஊக்குவித்து `தமிழ்நாடு மூளைச்சாவு உடலுறுப்பு தான திட்ட’த்தை உருவாக்கி இருக்கிறது. 

இதன் மூலம் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்கிறது. இப்படிக் கிடைக்கப்பெறும் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது சட்டரீதியானது. இதற்கு நேரெதிராக சட்டத்துக்கு புறம்பாக உறுப்புகளை வாங்கி அல்லது பறித்து விற்கும் சந்தைதான் சிவப்பு சந்தை.

சிவப்பு சந்தை என்பது 

இன்றைக்கு நேற்று உருவானதல்ல… பல காலமாகவே இருக்கிறது என்றாலும் இப்போது தன் பரப்பை விரிவாக்கிக் கொண்டுள்ளது. சிறுநீரகம் என்பது ரத்தத்தைச் சுத்திகரித்து, கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியமான உறுப்பு என்பதையெல்லாம் தாண்டி பணத்தேவை கழுத்தை நெரிக்கும்போது விற்று காசு பண்ணுகிற ஒரு பொருளாகத்தான் அதை ஏழைகள் அறிந்திருந்தார்கள். எத்தனையோ பேர் சிறுநீரகத்தை விற்ற கதையையும், பறிகொடுத்த கதையையும் கேள்விப்பட்டிருக்கிறோமே… அதுதான் சிவப்பு சந்தையின் ஆரம்ப கட்டம். 

தலைமுடி தொடங்கி ரத்தம், கண், இதயம், கணையம், கல்லீரல், கருமுட்டை, தோல், எலும்பு என உடலின் அத்தனை அங்கங்களும் சிவப்பு சந்தையின் விற்பனைப் பொருட்கள் என்றால் அதிர்ச்சிகரமாக இருக்கிறதல்லவா? இன்னும் நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல்களைக் கொண்டு ‘The red market’ என்னும் நூலை எழுதியிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்கார்ட் கார்னி. மேலைநாடுகளில் வாழும் மக்களின் உறுப்புத் தேவைக்கு இந்தியா போன்ற ஏழைநாட்டு மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கை கடுமையாகச் சாடுகிறார் ஸ்கார்ட் கார்னி. 

சிவப்பு சந்தை குறித்து எழுத வேண்டும் என அவர் எண்ணத் தொடங்கியதுமே உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கள ஆய்வின் மூலம் பல அதிர்ச்சிகரமான தகவல்களைக் கண்டறிந்து, எவ்வித சமரசங்களுமின்றி உண்மை நிலையைப் பதிந்திருக்கிறார். சிவப்பு சந்தை குறித்து மிக ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே நூலான ‘The red market’ நூலின் சில முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம்.

திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு தலைமுடியை காணிக்கையாகக் கொடுப்பதென்பது பலரது வேண்டுதலாக இருக்கும். தினந்தோறும் ஆயிரக்கணக்கில் காணிக்கை தரப்படும் தலை முடிகள் என்னவாகின்றன? அவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகின்றன என்கிற பதில் கிடைக்கும். தலை முடியை வைத்து என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? ஆண்களின் தலைமுடி பேக்கரியில் பயன்படுத்தும் ஒரு வித ரசாயனப் பொருள் செய்வதற்கும், பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது. 

மேற்குவங்க மாநிலம் புர்பஸ்தலி என்னும் ஊரில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அந்நிறுவனம் எதை ஏற்றுமதி செய்தது தெரியுமா? அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்குத் தேவைப்படும் மனித எலும்புகளை. இதன் மூலம் அந்நிறுவனம் ஆண்டுக்கு 2 முதல் 5 கோடி வரை வருமானத்தை ஈட்டியது. தங்களது நிறுவன ஊழியர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா என்று நோட்டம் விடுவார்கள். பிணத்தை புதைத்தால் தோண்டி எடுத்து விடுவர். 

எரித்தார்கள் என்றால் உறவினர் சென்ற பின் பாதி எரியும்போதே அணைத்து பிணத்தைத் தூக்கி விடுவர். இப்படியாக தூக்கி வரும் பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அதனை சுத்தமாக பாலீஷ் செய்து அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு ஏற்றுமதி செய்து விடுவர். அமெரிக்கா, ஐரோப்பாவில் உறுப்பு திருட்டுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை.

கடலோரவாசிகளின் வாழ்க்கையையே கவலைக்கிடமாக்கியது 2004ம் ஆண்டு சீற்றம் கொண்ட ஆழிப்பேரலை. வாழ்வாதாரத்தைச் சுழற்றிப் போட்ட அந்த அலையின் காரணமாக கடலோர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்த ஒரே பொருளாதாரத் தீர்வு கிட்னியை விற்பதுதான். சென்னை மணலிக்கு அருகில் இருக்கும் சுனாமியால் சுழற்றியடிக்கப்பட்ட ஒரு குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம்’. ஏனெனில், இங்கு குழந்தைகளைத் தவிர அனைவருமே தங்களது ஒரு கிட்னியை விற்றுள்ளனர். இதே காரணத்துக்காகவே சென்னை வில்லிவாக்கத்தையும் கிட்னிவாக்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். 

இதில் கொடுமை என்னவென்றால் 5 லட்சம் தொடங்கி 15 லட்சம் வரை விலை போகும் கிட்னியை கொடுப்பவருக்கு தரப்படும் தொகை வெறும் 50 ஆயிரம் ரூபாய்தான். அதிலும் மருத்துவச் செலவு, கமிஷன் என்று கூறி, 10 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு 40 ஆயிரத்தைத்தான் தருகிறார்கள். கிட்னியை கொடுத்த ஏழைகளைக் காட்டிலும் அதை எடுத்து விற்கும் இடைத்தரகர்களே அதிக வருமானத்தை ஈட்டுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

ரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் ரத்தம் கொடுக்க பணம் வசூல் செய்யலாம் என்று சட்டமே இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து, கோரக்பூரில் ஒருவர், 4 பேரைக் கடத்திச் சென்று, அவர்களுடைய ரத்தத்தை உறிஞ்சி 
விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்டாலும் பண வலிமையால் விடுதலையாகி விட்டார். மேலைநாடுகளில் பணம் படைத்தவர்கள் உயிர்வாழ வேண்டுமெனில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களின் உறுப்புகளை வெகுசுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம். ஏழை மக்களின் உடல் என்பது விற்பனைக்கான பண்டமாகத்தான் பார்க்கப்படுகிறது என்கிற பணக்கார வர்க்கச் சிந்தனை பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார் ஸ்கார்ட் கார்னி. 

எந்தப் பொருளுக்குத் தேவை அதிகம் இருக்கிறதோ, அதற்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும். இதயம், கணையம், கல்லீரல் என எந்த உறுப்பாக இருந்தாலும் சிவப்பு சந்தையில் அது நல்ல விலையுடைய ஒரு பண்டம்தான். பணம் என்கிற சக்திதான் இச்சந்தையை இயக்குகிறது, இதில் ஈடுபடுகிறவர்கள் பணத்துக்காக தங்களது மனிதத்தன்மையை இழந்து விடுகின்றனர். இதயத்துடிப்பு, நாடித் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இருந்து நல்ல உடல் வளத்துடன் இருக்கும் ஒருவரது மதிப்பு ஒரு கோடி ரூபாய். 

இப்படியாக ஒவ்வொரு மனிதர்களின் மதிப்பையும் அளவிடக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது இந்த சிவப்பு சந்தை. சிலஆயிரங்களுக்காக குற்றச்செயலில் ஈடுபடுவோர் இருக்கையில் லட்சங்களை வாரித்தரும் தொழில் எனும்போது இதற்கும் பலர் கடை விரித்து வியாபாரத்தைச் சத்தமின்றி நடத்திக் கொண்டிருக்கின்றனர். மாற்று உறுப்பு தேவைப்படும் வெளிநாட்டவர் டூரிஸ்ட் விசாவில் இங்கு வந்து மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டு செல்கின்றனர். அவர்களது நாட்டைக் காட்டிலும்  அறுவை சிகிச்சைக்கான செலவுகளும் இங்கு குறைவு… அங்கு கிடைக்காத ஏழை மக்களின் உறுப்புகள் இங்கு கிடைக்கும். 
சட்டத்துக்குப் புறம்பாக உறுப்புகளுக்காக நடைபெறும் சிவப்பு சந்தையைப் பற்றி பார்த்தோம். சட்ட ரீதியாக உறுப்பு தானத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உறுப்புகளின் நிலை என்ன? 

சட்டரீதியாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவோ எவ்வழியில் உறுப்புகள் பெறப்பட்டாலும் அதன் மூலம் பயனடைகிறவர்கள் பணம் படைத்தவர்கள்தானே அன்றி ஏழைகளல்ல… இன்றைய சூழலில் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு ஏழை நோயாளி, கல்லீரல் செயலிழப்புக்கு ஆளாகிறார் என்றால் சாவதைத் தவிர, அவருக்கு வேறு வழியே இல்லை. அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. உறுப்புதானத் திட்டத்தின் மூலம் பெறப்படும் உறுப்புகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளுக்கே வழங்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் சுகாதார உரிமை செயல்பாட்டாளர் ஆனந்தராஜ்.

‘‘மூளைச்சாவில் உயிரிழந்தவர்களின் உறுப்புகளை தானமாகப் பெற்று தேவையுடையவர்களுக்குப் பொருத்தலாம் என்பது ஆகச்சிறந்த திட்டம். இருந்தும் இத்திட்டத்தினால் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் பார்க்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு கல்லீரல் தானமாகப் பெறப்பட்டாலும், அதைப் பொருத்துவதற்கென 50 முதல் 70 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றனர். ரத்தம் தானமாகப் பெறப்பட்டது என்றாலும், அதை ஏற்றியதற்கான தொகை பில்லில் சேர்க்கப்பட்டிருக்கும். தானம் என்பதற்கான அர்த்தமே இங்கு மாறிவிடுகிறது. 

தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது. தானமாகப் பெறப்படும் உறுப்புகளில் தனியார் மருத்துவமனைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட உறுப்புகள் எத்தனை? அரசு மருத்துவமனைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட உறுப்புகள் எத்தனை? தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளுக்கு நான்கில் ஒரு பங்கு உறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலே அது அதிகம்தான். அதுவும் கண் மற்றும் கிட்னிதான் வழங்கப்பட்டிருக்குமே தவிர கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் வழங்கப்படவே இல்லை.

கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளை மாற்றுவதற்கான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. மருத்துவத்துறையில் இந்திய அரசு தன்னிறைவு அடையவில்லை என்பதற்கான சாட்சியம்தான் இது. அரசே மருத்துவ வசதிகளுக்கு தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளில் மேற்கண்ட உறுப்புகளை மாற்றுவதற்கான வசதிகள் இல்லை என்பது முற்றிலும் உண்மையல்ல. தமிழகத்தில் 20 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இருக்கின்றன. இவற்றில் அதற்கான வசதிகள் இருந்தும், பல மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. 

உறுப்பு தானம் மத்தியப் பதிவுத் துறையில் பதிவோருக்கு வரிசை அடிப்படையில் உறுப்புகள் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ‘கல்லீரல் தேவை’ என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளி பதிகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். வரிசை அடிப்படையில் அவரது பெயர் முதன்மையாக இருக்கிறது என்றாலும் அரசு மருத்துவமனையில் கல்லீரலை மாற்றுவதற்கான மருத்துவ வசதியில்லை என அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும். 

தனியார் மருத்துவமனைக்குச் சென்று லட்சங்களை செலவு செய்யும் அளவு வசதி இல்லாத அவருக்கு மாற்று கல்லீரல் கிடைக்க வாய்ப்பே இல்லை. அரசு மருத்துவமனையில் ஒரு ஏழைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் என்ன கிடைத்து விடப்போகிறது? அதுவே தனியார் மருத்துவமனையில் பணக்கார நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பல லட்சங்கள் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கே அதிக உறுப்புகள் அளிக்கப்படுவதற்கான காரணம் இதுதான்’’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ஆனந்தராஜ்.

வறுமையின் காரணமாக கிட்னியை விற்பது, பணத்துக்காக வன்முறையின் மூலம் உடல் உறுப்புகளை திருடுவது அல்லது பறிப்பது என இதன் கருப்புப் பக்கங்கள் இப்படியெனில், பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாகத்தான் மருத்துவத்துறையும் இயங்குகிறது. அப்படியெனில் ஏழைகள் வாழத் தகுதியற்றவர்களா என்கிற கேள்வியும் எழுகிறது. பணம், சந்தை என இவையெல்லாம் மனிதனின் நுகர்வுக்காகக் கட்டமைக்கப்பட்டதுதான். இதுவே மனிதத்தை சாகடித்து மனிதனை ஆளத் தொடங்கினால் மனித இனத்துக்கான அழிவு நிச்சயம்.