வெள்ளி, 1 நவம்பர், 2019

இந்தியர்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் Spyware - உறுதி செய்த வாட்ஸ் அப் நிறுவனம்!


Image
மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் என பலதரப்பைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலின் Pegasus ஸ்பைவேர் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
கண்காணிப்பு தொழில்நுட்பத்துறையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டின் NSO Groupஆனது, கடந்த மே மாதவாக்கில் சுமார் இரண்டு வாரங்களுக்கு இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு ஒன்றின் போது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட பல உலக நாடுகளைச் சேர்ந்தவர்களின் போன்களும் இந்த தாக்குதலுக்கு இரையாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
யார் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள், எத்தனை பேர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனமே தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 
மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமே இந்த ஸ்பைவேர் ஸ்மார்ட் போன்களை அணிகியதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தகவலை NSO Group மறுத்துள்ளது, Pegasusஐ வைத்து நாங்கள் உளவு பார்க்கவில்லை என்றும் அதனை அரசுகளுக்கு மட்டுமே தயாரித்து வழங்கியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Pegasusஐ பயன்படுத்தி முதலில் இணைப்பு ஒன்றினை அனுப்புவார்கள், இதனை க்ளிக் செய்துவிட்டால் போதும், போனின் பாதுகாப்பு அம்சங்களை சமரசம் செய்துவிட்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவருக்கு தெரியாமலே அவரின் கடவுச் சொற்கள், காண்டாக்ட் லிஸ்ட், புகைப்படங்கள்/வீடியோ, டெஸ்ட் மெசேஜ்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அணுகிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் அந்த போனின் கேமரா, மைக்ரோபோனை ஆன் செய்து அதன் பயனாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க இயலும்.
எனினும் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இணைப்பு லிங்கை கூட அனுப்பத் தேவை இல்லை எனவும், வாட்ஸ் அப் வாயிலாக ஒரு வீடியோ மிஸ்ட் கால் கொடுத்தாலே போதுமானது என்ற அதிர்ச்சிகர தகவலும் தெரியவந்துள்ளாது.

credit ns7.tv