வெள்ளி, 25 செப்டம்பர், 2020

6 மாதத்திற்கு பின்பு ரயில் சேவை… சென்னை டூ கேரளா, கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் 27 ஆம் தேதி முதல் 3 தினசரி இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

கடந்த 6 மாத காலமாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பொது முடக்கத்தில் சில தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சென்னையுடன் இணைக்கும் நோக்கில், தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை ரயில்வே வாரியம் இயக்கி வருகிறது.

சென்னை – மதுரை பாண்டியன் விரைவு ரயில், சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை – தூத்துக்குடி விரைவு ரயில், சென்னை – கோயம்புத்தூர் சேரன் விரைவு ரயில், சென்னை – மேட்டுபாளையம் நீலகிரி விரைவு ரயில் உள்பட 9 சிறப்பு ரயில்கள் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 6 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கேரளா மற்றும் கர்நாடகா இடையே சென்னையிலிருந்து ரயில் வரும் ஞாயிறு முதல் துவங்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து கேரளா, மங்களூருக்கு 3 தினசரி சிறப்பு ரயில்கள்

சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.,27 லிலும், சென்னை-மங்களூரு இடையே செப்.,28 லிலும் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. சென்னை மைசூரு இடையேயான ரயில் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை – திருவனந்தபுரம் 27 ஆம் தேதியும், சென்னை-மங்களூரு இடையே 28 ஆம் தேதியும் ரயில்கள் புறப்படும்.சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மாலை 7.45 க்கு கிளம்பி திருவனந்தபுரத்திற்கு மறுநாள் காலை 11.45 க்கு சென்றடையும். திரும்ப மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னையிலிருந்து மங்களூருக்கு இரவு 8.10 க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.10 க்கு மங்களூரு சென்றடையும். திரும்பவும் மதியம் 1.30 க்கு மங்களூருவிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30க்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணி முதல் தொடங்கும்.ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.