ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!

 பீகார் தேர்தலுக்கான தேதிகளை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் 1 மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் 14 மாநிலங்களில் இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுத்துவிட்டது. அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் மாநில அரசுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்படாது என்பதை உத்திரவாதமாக வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு, மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை செயலர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், கொரோனா தொற்று மற்றும் தளவாட காரணங்கள் காரணமாகவும் இங்கு தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருக்கும் அரசியல் கட்சிகளும் கேரளாவில் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தொகுதிகளுக்கான தேர்தல்கள் நவம்பர் மாதம் பீகார் தேர்தல்களுடன் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும், 6 மாதங்கள் கழித்து மீண்டும் தேர்தல்கள் நடைபெறும். எனவே செப்டம்பர் 29ம் தேதி இம்மாநிலத்தில் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.