புதன், 16 செப்டம்பர், 2020

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

 அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5% இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

6 ம் வகுப்பு முதல்12 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆகிய படிப்புகளில் இளங்கலை மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி பேரவையில் தாக்கல் செய்தார். 

சாதி, சொத்து, பெற்றோரின் தொழில், கல்வி , சமூக பொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. 

பேரவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, அரசுபள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் குறைந்து வருவதாக மசோதாவில் இருப்பதை சுட்டிகாட்டி பேசினார்.  மேலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு போதாது என்றும் வருகாலங்களில் 10 சதவீதமாக உயர்ந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார். அதோடு, இந்த இடஒதுக்கீட்டிற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சட்டபாதுகாப்பு  அவசியம் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் இதனை அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கிலும், மருத்துவ மேற்படிப்பிற்கான வழக்கிலும் நீதிமன்றம் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். எனவே இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தில்,  இந்திய மருத்துவ குழுமம் தலையிடமுடியாது என்றும் ,  7.5 சதவீத இடஒதுக்கீட்டிலும் சமூக நீதி காக்கும் வகையில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று சிவி.சண்முகம் கூறினார். 


இதை தொடர்ந்து பேசிய முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமூகப் பின்னணியில் வேறுபாடு உள்ளவர்களாக இருப்பதால், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இதன்மூலம் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார். 
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாவும், இதன் மூலம் 1250 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றார். உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூக நீதி பெறுவதற்கு  வழிவகை செய்யும் என்று முதமைச்சர் குறிப்பிட்டார்.