புதன், 16 செப்டம்பர், 2020

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 413 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது: மத்திய அரசு!

 இந்தியாவில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் செம்படம்பர் வரையிலான காலகட்டங்களில் சுமார் 413 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த ரிக்டர் அளவுடைய அதிக நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வழிவகுக்கும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். 

 

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய புவியியல் அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 8 வரையிலான 7 மாத காலகட்டங்களில் சுமார் 413  நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதில் 153 நிலநடுக்கங்கள் 3 முதல் 3.9 ரிக்டர் அளவில் பதிவானவை. இது மக்களால் உணரப்பட்டது இருப்பினும் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

114 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4 முதல் 4..9 வரை பதிவானவை. இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் உணரப்பட்டது. இதனால் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

 

11 நிலநடுக்கங்கள் மட்டுமே ரிக்டர் அளவில் 5 முதல் 5.7 வரை பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் கட்டடங்கள் அதிக சேதத்தை சந்தித்ததாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.