புதன், 16 செப்டம்பர், 2020

வீட்டிலிருந்தே தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பலாம்!

 சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களும் இணைய வசதி இல்லாத மாணவர்கள், வீடுகளில் இருந்தே தேர்வு எழுதி விடைத்தாள்களை தபால் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019-20ம் கல்வியாண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறாமல் உள்ள இறுதி செமஸ்டர் தேர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளன. ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் பணிகளில் பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்துகின்றன. ஆன்லைன் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து, இணைய மூலம் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து, பின்னர் A4 தாளில் விடைகளை எழுதி, விடைத்தாள்களை இணையதளத்தில் Upload செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன. வீடுகளில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் விடைத்தாள்களை தபால் மூலம் அவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.

மாணவர்கள் புத்தகத்தை வைத்து பார்த்து தேர்வு எழுதும் Open Book தேர்வாக ஆன்லைன் தேர்வு முறை அமைந்தாலும், தேர்வின் தரம் குறையாத வகையில் வினாத்தாள்களை மிகக் கடுமையாக தயாரிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.