வியாழன், 17 செப்டம்பர், 2020

செல்லப்பிராணிகள் பட்டியலிலிருந்து பறவைகளை நீக்க முடியாது! - சென்னை உயர்நீதிமன்றம்

 செல்லப்பிராணிகள் பட்டியலிலிருந்து பறவைகளை நீக்க கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

மிருக வதை தடுப்பு சட்டம் மற்றும் விதிகளில் உள்ள செல்லப்பிராணிகள் என்ற விளக்கத்தை நீக்க கோரி வினோத் ஓ.ஜெயின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திறந்த வான்வெளியில் பறப்பதற்கான அடிப்படை உரிமையை பெற்றிருக்கும் பறவைகளை, செல்ல பிராணி என கூண்டுக்குள் அடைத்து வைக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், பறவைகளுக்கு மட்டுமே பறக்கமுடியும் என்ற நிலையுடன் இறைவன் படைத்து உள்ளபோது, பறக்க முடியாத மனிதன் அவற்றின் உரிமைகளை மறுக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின்படி பறவைகளும் அடிப்படை உரிமைகளை பெற்றிருப்பதாகக் கூறிவதை முதன்முதலாக கேள்விப்படுவதாக கூறியதுடன், பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டுமென  விரும்புகிறீர்களா எனவும், செல்லப் பிராணிகளை கூண்டில் வைத்து வளர்க்க மனிதர்களுக்கு உரிமை இல்லையா எனவும் மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் மிருகவதை தடுப்புச் சட்டத்திலிருந்து செல்லப் பிராணிகளுக்கான விளக்கத்தை நீக்கினால், மீன் காட்சியகத்தில் மீன்களை வைத்திருப்பது முதல் மிருககாட்சி சாலையில் விலங்குகளை வைத்திருப்பது வரை அனைத்துமே சட்டவிரோத காவலாக மாறிவிடும் என தெரிவித்து செல்லப் பிராணிகள் பட்டியலிலிருந்து பறவைகளை நீக்கும் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.