புதன், 30 செப்டம்பர், 2020

அக். 31 வரை தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் எவை?

 தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகளில் , ” பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 31 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 10 – 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீட்டிப்பு தொடர்கிறது.

மேலும், உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பார்சல் சேவை இரவு 10 மணி வரையும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

புறநகர் மின்ரயில் போக்குவரத்துக்கும் தடை தொடரும் எனவும் தமிழக அரசு தனது வழிமுறைகளில் தெரிவித்தது. திரைப்படத் படப்பிடிப்புகளுக்கு ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1ம் தேதி  தொடங்கிய முடக்கநிலை நீக்கத்தின் நான்காவது கட்டம்  நாளையுடன் முடிவடையும் நிலையில்  (செப் 30) தமிழக அரசு முடக்கநிலை நீக்கத்தின் ஐந்தாவது கட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,501 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.58% குணமடைந்துள்ளனர்