செவ்வாய், 15 செப்டம்பர், 2020

நீட் தற்கொலைகள் - தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

 நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்த தற்கொலைகளை அரசு ஊக்குவிப்பது போல உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்வு பயத்தை போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், கடந்த சில தினங்களில் நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மீண்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையிட்டார். அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதை கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அனுமதியும் வழங்கி உள்ளனர்.