வியாழன், 24 செப்டம்பர், 2020

16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: மத்திய அரசு

 நேபாளம், பூட்டான், மொரீஷியஸ் உள்ளிட்ட பதினாறு நாடுகளிலுள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கப்படலாம் எனக் கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஓர் கேள்விக்கு, 43 நாடுகள் visa-on-arrival வசதியையும் 36 நாடுகள் e-visa வசதியையும் இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன என எழுத்து வடிவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் V முரளிதரன் பதிலளித்தார்.

மேலும், “இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை 16 நாடுகள் வழங்குகின்றன” என்றும் முரளிதரன் குறிப்பிட்டார்.

அமைச்சர் வழங்கிய தகவல்களின்படி பார்படாஸ் (Barbados), பூட்டான், டாமினிகா (Dominica), கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் SAR, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் (Trinidad) மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகள் இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவச விசா நுழைவை வழங்குகின்றன.

இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு visa-on-arrival வசதியை வழங்கும் 43 நாடுகளில் ஈரான், இந்தோனேசியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளும் அடங்கும்.

e-visa வசதியை வழங்கும் 36 நாடுகளில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் உண்டு என அமைச்சர் சமர்ப்பித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் இலவச விசா பயணம், visa-on-arrival மற்றும் e-visa வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முரளிதரன் குறிப்பிட்டார்.

விசா மற்றும் விசா தொடர்பான செயல்முறைகளை வழங்குவது அந்தந்த நாட்டின் ஒருதலைபட்ச முடிவு என்றாலும், இந்திய நாட்டினருக்கான எளிதான மற்றும் தாராளமயமாக்கப்பட்ட விசா கொள்கை தொடர்பான பிரச்சனைகள் வெளிநாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் தவறாமல் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் பதிவு செய்தார் முரளிதரன்.