அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களின் பொருளாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மாவட்டங்களுக்குள் மற்றும் இடையே பேருந்து சேவை செப்டம்பர் 7 ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தவித்த மக்கள் சொந்த ஊர்களுக்குச் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதேபோல், சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம் தொடங்கியது.
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இன்று காலை 7 மணி முதல் இயக்கப்பட்டன. கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில்
மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பின்னர் செப்டம்பர் 9ம் தேதி முதல் பரங்கிமலை - சென்ட்ரல் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அலுவலக நேரத்தில் 5 நிமிட இடைவெளியிலும், அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும் என்றும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கபடுவர் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.