திங்கள், 7 செப்டம்பர், 2020

சுற்றுலாத்தலமான தேக்கடி 5 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

 கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடி 5 மாதங்களுக்குப் பின்பு திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில், யானைசவாரி, டைகர்வியூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகுசவாரி என பல பொழுதுபோக்கு விஷயங்கள் இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது. 

கொரோனா வைரஸ் எதிரொலியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 5 மாத காலமாக தேக்கடி சுற்றுலாத்தலம் மூடப்பட்டிருந்தது. கேரள மாநிலத்தில் பல்வேறு கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடி திறக்கப்பட்டால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ள காரணத்தினால் 5 மாத காலமாக தேக்கடி சுற்றுலா தலம் மூடி வைக்கப்பட்டிருந்தது. 

 

3

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று 5 மாதத்திற்குப்பின் இன்று தேக்கடி திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படகு சவாரி காலை 9.30 மணிக்கு துவங்கியது. வழக்கமாக படகுகள் 5 டிரிப் இயக்கப்பட்ட நிலையில் தற்போது காலை 9.30, மாலை 3.30 மணி ஆகிய நேரத்தில் 2 டிரிப் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் 10 வயதுக்கு கீழ், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை என தொரிவிக்கப்பட்டுள்ளது. படகில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

படகில் பயணம் செய்பவர்களுக்கு வெப்பமாணியைக் கொண்டு காய்ச்சல் பரிசேதனை செய்யப்பட்டது. மேலும் கண்டிப்பாக முக கவசம் அணிதல், கை கழுவுதல், சமுக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை பயணிகளுக்கு அறிவுத்தப்பட்டது.