சனி, 6 நவம்பர், 2021

ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை: டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு… 30 மோசடி நபர்கள் கைது

 6 11 2021 வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டதையடுத்து, காவல்துறை ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கையில் 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கப்பட்டதாக பல புகார்கள் எழுந்தது. இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட மோசடி நபர்கள் 30 பேர்களை ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் மூலம் அதிரடியாக கைது செய்த காவல்துறை தீபாவளிக்கு முன் தினம் அனைவரையும் சிறையில் அடைத்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் சேஷாத்திரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி இராணி எலிசபேத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்குவர்.

இது குறித்து தமிழக அரசு ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை என்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சிலர் அரசு வேலை, சிலர் வங்கி வேலை, சில ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் உதவியாளர், தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி இராணி எலிசபத் (36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கணக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர்.

இந்த 30 மோசடி நபர்களும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் உள்ளன.

இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு, இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது.

இதுபோன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்கள் 044-28447701 & 28447703 (Fax) செல்: 9498105411 (Whatsapp)மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டறை எண்: 044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண்: 044-23452380 ஆகியவற்றைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-order-to-dgp-operation-job-scam-30-cheating-accused-arrested-365339/

Related Posts: