2 11 2021 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாகவும் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில், குமரிக் கடல், இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரும். அதன்பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை எச்சரிக்கை
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 2) டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 3: மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 4: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மன்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர்,திருவண்ணாமலை, பெரம்பலூர், மயிலாடுதுறை,காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, கனமழை காரணமாக கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கேரள கடலோரம், லட்சத்தீவு,மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். அதனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-update-school-shut-down-due-to-heavy-rain-363415/