
ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்? விஜய் சீக்கிரமே கட்சித் தொடங்கிவிடுவார் போலிருக்கிறதே? அஜித் அதிமுகவை வசப்படுத்திவிடுவாரோ? விஷால் அரசியல் அஸ்திவாரம் போடுகிறார்...
இப்படித்தான் கடந்த சில மாதங்களாக செய்திகள் உலவிக்கொண்டிருந்தன. ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் அத்தனைக்கும் அப்பால் ஒரு அதிரடி நிகழ்ந்திருக்கிறது. ஆம். கலைஞானி என கொண்டாடப்படும் கமலஹாசன் கட்சி தொடங்க இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே அரசல் புரசலாக இருந்த பேச்சு, இப்போது கமல் மூலமே ஊர்ஜிதமாகியுள்ளது. ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனிக்கட்சி தொடங்குவது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவரது பேட்டியில், “ ஆம். தனிக்கட்சி தொடங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது கட்டாயத்தால் ஏற்பட்ட முடிவு. ஏனென்றால், இப்பொழுது இருக்கும் கட்சிகள் எதுவும் என் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றவையல்ல. அரசியல் கட்சி என்பது சித்தாந்தம் சார்ந்தது.நான் பினராயி விஜயனை சந்தித்த உடனே நான் கம்யூனிச ஆர்வத்தை பெருக்கிக்கலாம். ஆனால், ஒரு கட்சியில் இணைவது என்பது நம்பிக்கை கொள்வது, தப்புவது, தாவுவது போன்ற எளிய காரியமல்ல. என்னுடைய அரசியல் இலக்குகளை இப்போதுள்ள கட்சிகள் நிறைவு செய்யவில்லை. சசிகலா அகற்றப்பட்டது ஒரு திடமான முன்னகர்வு. ஆனால், அது வெறும் தொடக்கம் தான். அதற்காக வலிமையாக குரல் கொடுத்தவன் நான். தற்போது அது நடந்திருக்கிறது. இது எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய முடியும். எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, நான் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறேன்” என்கிறார்.
மேலும், “எனக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்துவிட்டு மீண்டும் என்னை நீக்குவதற்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம். நான் சரியாக செயல்படவில்லை என்றால் உடனடியாக நீக்க வேண்டும். ஏன் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்கிறார்கள். நான் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும் அல்லவா. அதனால் தான், தமிழகத்திலிருந்து தொடங்குகிறேன். ஆமாம். நான் சந்தர்ப்பவாதிதான். நான் நேரடி அரசியலுக்கு வர இதுதான் தக்க சமயம். ஆனால், நான் மாற்றத்தை முன்னெடுக்கப் போகிறேன். நான் தோற்றுவிடக்கூடும் என சிலர் எச்சரிக்கிறார்கள். ஒன்று நான் இருக்கிறேன் அல்லது ஊழல் இருக்கட்டும். இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது” என ஆவேசமாக பேசி அரசியல் வருகையை 1000 மடங்கு உறுதிசெய்திருக்கிறார் உலகநாயகன்.