செவ்வாய், 19 ஜூன், 2018

தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன? - நீதிபதி கிருபாகரன் கேள்வி! June 19, 2018

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, என போலீஸாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில், இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து சில அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில், போலீஸாரின் செயல்பாடு தொடர்பான வேறொரு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கிருபாகரன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தொடர்பாக, தலைமை நீதிபதியை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது, போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர், என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். 

மேலும், முதலமைச்சர், அமைச்சர் குறித்து விமர்சிப்பவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்வதாகவும், ஆனால் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டார். 

தலைமை நீதிபதி மீது அவதூறு பரப்புவோர் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, 2 வாரங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்கவும், நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.