செவ்வாய், 26 ஜூன், 2018

ராமேஸ்வரத்தில் கிடைத்த ஆயுதக் குவியலின் பின்னணி பற்றிய விசாரணை தீவிரம் June 26, 2018

VIEWS
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்கள் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாகியுள்ளனர்.


Image
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் அவரது  வீட்டில் கழிவுநீர் தொட்டிக்கு நிலத்தை தோண்டியுள்ளார். அப்போது சிதைந்த நிலையில் 22 பெட்டிகள் கிடைத்துள்ளன. அதனால், அதிர்ச்சியடைந்த எடிசன், இது பற்றி தங்கச்சிமடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்தன. 400 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், 4000 இயந்திர துப்பாக்கி தோட்டாக்கள், 5 கை எறி குண்டுகள், 15 கண்ணிவெடிகள் இருந்தன. 

இவை அனைத்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள்  பயன்படுத்திருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  ராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, வீட்டின் உரிமையாளர் எடிசனிடம் விசாரணை நடத்தி வருகின்றார். 

மேலும் ஜேசிபி மூலம் அந்த இடத்தை முழுமையாக தோண்டி ஆராயவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நேற்றிரவு ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்கு கைப்பற்ற பட்ட பெட்டிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான துப்பாக்கி தோட்டக்கள் இருந்ததாகக் கூறினார்.  இவை எந்த நாட்டைச் சேர்ந்த தோட்டாக்கள் எப்போது மண்ணில் புதைக்கப்பட்டன என தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உள்ள மர்மம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாகியுள்ளனர்.