ஞாயிறு, 5 ஜூலை, 2020

தமிழகம் முழுவதும் முதல் முறையாக அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் முழுவதும் ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு, இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தேவையில்லாமல் செல்லும் வாகனங்களை, போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து தீவிர கண்காணித்து வருகின்றனர்.