வியாழன், 23 ஆகஸ்ட், 2018

திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அச்சத்தில் கரையோர மக்கள்! August 23, 2018

Image

திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன. மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால், கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொள்ளிடம் அணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் தற்போது 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அணையின் 8 மதகுகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதை அடுத்து, கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

முக்கொம்பு மேலணை 1836ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்து, 8 மதகுகள் உடைந்ததால், விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி, அங்கு ஆய்வு செய்தார். 

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றார். உடைந்த பாலம் 182 ஆண்டுகள் பழமையானது என குறிப்பிட்ட ஆட்சியர், இன்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.