புதன், 29 ஆகஸ்ட், 2018

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபரி நீர் போக்கி மூடப்பட்டது! August 28, 2018

Image


மேட்டூர் அணையின் நீர்வரத்து 22,000 கன அடியாக குறைந்ததையடுத்து வெளியேற்றம் 20,800 கன அடியாக குறைக்கப் பட்டதால் இன்று காலை 8.00 மணி முதல்16-கண் உபரி நீர் போக்கி மூடபட்டது.

கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23ம் தேதி அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது. அப்போது நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்ததால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப் பட்டது. அதன் பின்னர் மீண்டும் கர்நாடக பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக  இம் மாதம் இரு முறை அணை நிரம்பி வழிந்தது.

இதனையடுத்து கடந்த 9- ம் தேதி முதல் கூடுதல் நீரை அணையின் 16 கண் பாலம் உபரி நீர் போக்கி மூலம் அதிக பட்சமாக வினாடிக்கு 2,05,800 கன அடி வரை வெளியேற்றப் பட்டது.மேலும்  இம்மாதம்  23-ம் தேதி அணையின் நீர்திறப்பு 20,000 கன அடியாக குறைக்கப் பட்டதையடுத்து 14 நாட்களுக்கு பிறகு 16-கண்உபரி நீர் போக்கி மூடப்பட்டது. 

பின்னர் மேட்டூர் அணையின் நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரித்ததையடுத்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன் தினம்(26.08.2018) காலை மீண்டும் 16 - கண் உபரி நீர் போக்கி வழியாக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படிமேட்டூர் அணையின் நீர்வரத்து 22,000 கன அடியாக குறைந்ததையடுத்து வெளியேற்றம் 20,800 கன அடியாக குறைக்கப் பட்டதால் 16-கண் உபரி நீர் போக்கி மூடபட்டது.

அப்போது அணை நீர்மட்டம்  120.05  அடியாகவும், நீர்இருப்பு : 93.55  டி.எம்.சி. யாகவும் இருந்தது.மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருந்தது.