
பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் பதவியேற்றார்.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் கட்சி 116 இடங்களை கைப்பற்றியது. இதனால், சிறிய கட்சிகளின் ஆதரவுடன், கூட்டணி அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 176 வாக்குகள் பெற்று இம்ரான்கான் வெற்றி பெற்றார். இதன்மூலம், பிரதமராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மம்னூன் உசேன், இம்ரான் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான, காங்கிரசைச் சேர்ந்த, நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார்.