வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசின் உயர் கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு முடிவெடுக்கவும், அடுத்த கல்வியாண்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 


மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே   அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

 

மேலும், இடஒதுக்கீட்டை இறுதி செய்ய  இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி மற்றும் தமிழக அரசின் அதிகாரி அடங்கிய குழுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியது  தேவையற்றது  என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யோகேஷ் கண்ணாவும், வி.கிரியும் ஆஜராகினர். 

 

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இட ஒதுக்கீடு தொடர்பாக இறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு தொடர வேண்டும் என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர்.