ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சிறைகளில் அதிகளவில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் – தேசிய குற்ற ஆவண காப்பகம்

 இந்தியாவில் உள்ள சிறைகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப்பிரிவினர், உயர் சாதியினர்களோடு ஒப்பிடுகையில், தலித்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் அதிகளவில் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் தகவலின்படி, குற்றவாளிகளைவிட விசாரணைக்கைதிகளாக அதிகளவில் முஸ்லீம்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

2019ம் ஆண்டின் தகவலின்படி, நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் 21.7 சதவீதத்தின் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணைக்கைதிகளாக 21 சதவீத தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். 2011ம் ஆண்டில் நிகழ்த்தபட்ட கணக்கெடுப்பில், இது 16.6 சதவீதமாக இருந்தது.

பழங்குடியின மக்கள் தொகையில், 13.6 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 10.3 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2011 கணக்கெடுப்பின்போது இது, 8.6 சதவீதமாக இருந்தது.

இந்திய மக்கள்தொகையில் 14.2 சதவீதம் உள்ள முஸ்லீம்களில், 16.6 சதவீதம் பேர் குற்றவாளிகளாகவும், 18.7 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் சிறைகளில் உள்ளனர்.

நாட்டில் நீதித்துறை எப்போதும் ஏழை மக்களுக்கு சாதகமாகவே இல்லை என்ற கருத்து நிலவுகிறது. வசதி படைத்தவர்கள் நல்ல வழக்கறிஞர்களை வைத்து எளிதில் ஜாமின் பெற்று விடுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சிக்கித்தவிக்கும் பாமர மக்கள், சிறிய சிறிய வழக்குகளில் மாட்டினாலுமே, அவர்களால் எளிதில் ஜாமின் பெற முடிவதில்லை என்று காவல்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர் என் ஆர் வாசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள்தொகையில் 41 சதவீதம் அளவு உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவினரிடையே 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில்,ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினரில் 35 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், இருபிரிவுகளிலும் 34 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் சாதி இந்துக்கள் மற்றும் மற்ற மதங்களில் உள்ள வகைப்படுத்தப்படாத மக்கள், மக்கள்தொகையில் 19.6 சதவீதமாக உள்ள நிலையில், அவர்களில் 13 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும் 16 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, முஸ்லீம் மக்களில், 2015ம் ஆண்டில் 20.9 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும், 15.8 சதவீதத்தினர் குற்றவாளிகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 2019ம் ஆண்டில் இதன் சதவீதம் 18.7 மற்றும் 16.6 சதவீதமாக உள்ளது.
எஸ்சி மற்றும் எஸ்டி விவகாரத்தில் எந்த ஒரு மாற்றமும் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்துவிடவில்லை. 2015ம் ஆண்டில் மட்டுமல்லாது 2019ம் ஆண்டிலும் குற்றவாளிகள் மற்றும் விசாரணைக்கைதிகளின் அளவு 21 சதவீதமாக உள்ளது.

பழங்குடி மக்களை பொறுத்தவரையில், 2015ம் ஆண்டில் 13.7 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 12.4 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2019ம் ஆண்டில் இதன் அளவு 13.6 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.

விசாரணைக்கைதிகள்

தலித்கள் அதிகளவில் விசாரணைக்கைதிகளாக உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம் (17,995), பீகார் (6,843), பஞ்சாப் (6,831)

பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மத்தியபிரதேசம் (5,894), உத்தரபிரதேசம் (3,954), சட்டீஸ்கர் (3,471).

முஸ்லீம்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரபிரதேசம் (21,139), பீகார் (4,758), மத்தியபிரதேசம் (2,947).

குற்றவாளிகள்

தலித்கள் அதிகளவில் குற்றவாளிகளாக உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம் (6,143), மத்திய பிரதேசம் (5,017), பஞ்சாப் (2,786)

பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மத்தியபிரதேசம் (5,303), சட்டீஸ்கர் (2,906), ஜார்க்கண்ட் (1,985).

முஸ்லீம்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரபிரதேசம் (6,098), மேற்குவங்கம் (2,369), மகாராஷ்டிரா (2,114).