வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி

 தமிழகத்தின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன. லேசான காய்ச்சல் இருந்ததால், அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நல்லக்கண்ணுவுக்கு சாதாரணக் காய்ச்சலாகத்தான் இருக்கும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வரும் வேளையில், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அது பொதுமக்களிடம் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.