திங்கள், 31 ஆகஸ்ட், 2020

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

 தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன், 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின் தெளிவில்லாத முடிவை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தமிழகம் வந்தால் சரி செய்து விடுவோம் என சட்டப்பேரவையில் கூறிய முதமைச்சரால், இன்று வரை சரி செய்ய முடியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊரடங்கால், திமுகவின் தேர்தல் பணியை முடக்கி விட முடியாது எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊரடங்கு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆரம்பம் முதலே ஒரு தெளிவின்றி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒருபுறம் 144 தடை உத்தரவு, மறுபுறம் பல்வேறு தளர்வுகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுபடுத்த முடியாது என சுகாதாரத் துறையே தெரிவித்துள்ள நிலையில், இந்த 144 தடை அரசின் உள்நோக்கை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். எனவே சர்வாதிகார போக்குடன் அரசு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.