சனி, 29 ஆகஸ்ட், 2020

ஹெச்.வசந்தகுமார் உடல் அகஸ்தீஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது

  கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. அவரது உடல் கன்னியாகுமரியில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தனது தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதற்காக தொகுதியிலே நீண்ட நாட்களாக தங்கியிருந்து இப்பணிகளை கவனித்து வந்தார். சென்னை திரும்பிய அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரது மனைவி தமிழ்செல்விக்கும் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம்தேதி அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வசந்தகுமாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மறைந்தார்.