சனி, 11 டிசம்பர், 2021

கொரோனா வைரஸ்: தமிழக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை

 10 12 2021 உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் அதிக அளவில் பரவி வருகிறது. புதிய அச்சுறுத்தலாக இது அமையலாம் என்று, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்படவில்லை. இருந்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் “தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேலே உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களுக்கு வகுப்பில் அனுமதி இல்லை. எனவே அனைத்து மாணவர்களும் தடுப்பூசிக் கொள்ள கல்லூரிகள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

கல்லூரி மற்றும் கல்லூரி விடுதி உணவகங்களில் எவர் சில்வர் தட்டுகளுக்கு பதிலாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் தட்டுகளை மாணவர்களுக்கு உணவகங்களில் வழங்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் உணவை உட்கொள்ளும் வகையில் நான்கு அல்லது ஐந்து முறை உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-orders-all-colleges-to-not-conduct-college-fest-381248/


Related Posts: