சனி, 19 ஆகஸ்ட், 2017

அதிமுகவில் இரு அணிகள் உதயமானது முதல் இன்று வரை நடந்தவை! August 19, 2017


அதிமுகவில் இரு அணிகள் உதயமானது முதல் இன்று வரை நடந்தவை!


அதிமுகவில் இரு அணிகள் உதயமானது முதல் இன்று வரை நடந்த முக்கிய நிகழ்வுகள். 

கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் மவுனத்தை கலைத்தார் ஓ. பன்னீர்செல்வம். இதனையடுத்து அன்றிரவே அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே. சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 14ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

பிப்ரவரி 15ம் தேதி சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

பிப்ரவரி 15ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். 

அன்றைய தினமே, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.  

பிப்ரவரி 18ம் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. 

மார்ச் 15ம் தேதி ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டார். 

மார்ச் 17ம் தேதி ஆர் கே நகர் இடைத் தேர்தலில், தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக மதுசூதனன் களமிறக்கப்பட்டார்.

மார்ச் 23ம் தேதி இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தவும் சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

ஏப்ரல் 10ம் தேதி பணப்பட்டுவாடா புகாரில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

ஏப்ரல் 18ம் தேதி அதிமுகவில் இருந்து தினகரன், சசிகலா குடும்பத்தினரை நீக்க மூத்த அமைச்சர்கள் முடிவு செய்தனர். ஓபிஎஸ் அணியினருக்கும் அவர்கள் அழைப்புவிடுத்தனர்.

ஏப்ரல் 19ம் தேதி அணிகள் இணைப்பு முயற்சியாக எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஏப்ரல் 21ம் தேதி அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து இருந்து சசிகலா படம் அகற்றப்பட்டது.

ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். 

ஏப்ரல் 29ம் தேதி - டெல்லி திஹார் சிறையில் டிடிவி தினகரன் அடைக்கப்பட்டார்.

ஜூன் 3ம் தேதி டிடிவி தினகரன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.  

ஜூன் 5ம் தேதி கட்சிப் பணியில் இருந்து 60 நாட்கள் விலகி இருக்கப் போவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். 

இந்த நிலையில், ஜூன் 11ந் தேதி அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்பட்டதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

60 நாட்கள் கெடு முடிந்த நிலையில், ஆகஸ்ட் 4ம்  தேதி மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டார் டிடிவி தினகரன் - 64 புதிய நிர்வாகிகளை நியமித்தும் அவர் உத்தரவிட்டார். 

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், சட்டவிதிகளின்படியே தாம் நியமிக்கப்பட்டதாக தினகரன் விளக்கம் அளித்தார். மேலும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் முதல்வராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆகஸ்ட் 11 - யார் 420 என தினகரன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாறிமாறி புகார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 14ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்றார்.

ஆகஸ்ட் 16ம்  தேதி திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள் என எடப்பாடி அணிக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்தார். 

ஆகஸ்ட் 17ம் தேதி ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டார்.  ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் அறிவிப்பு.

ஆகஸ்ட் 18 ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணையும் என காலை முதல் தகவல்கள் வந்தது ஆனால், கடைசி நேரத்தில் அணிகள் இணைப்பு தள்ளி போனது.