வியாழன், 18 ஜூலை, 2019

ரகசியமாக நடத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கான கருத்து கேட்பு கூட்டம்....! July 18, 2019

Image
கோவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டம், அனைத்து தரப்பையும் அழைக்காமல் ரகசியமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் அம்சங்கள் வரவேற்கும் விதமாக இருப்பதாக, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரகசியமாக இக்கூட்டம் நடத்தப்படுவதாக கூறி, கூட்ட அரங்கிற்குள் நுழைந்த பெரியார் திராவிடர் கழகத்தினர் வாக்குவாதம் செய்தனர். புதிய கல்விக்கொள்கையில் மாற்று கருத்துடையவர்கள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, தற்போது நடத்தப்பட்டது முதற்கட்ட கூட்டம் என்றும், அடுத்த கட்ட கூட்டம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டு, அனைத்து தரப்பினரையும் அழைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

credit ns7.tv